16 May 2013

ரஜினி: உச்சத்தில் நிலைமை… உள்ளத்தில் எளிமை!


ரஜினி: உச்சத்தில் நிலைமை… உள்ளத்தில் எளிமை!




ரஜினி என் நண்பர்’ என்று சொல்பவர்கள் பெரும்பாலும் இருப்பது உச்சாணிக் கொம்பில். ஆனால் ரஜினியோ வெரி சிம்பிள். தனது ‘உயிர் நண்பர்கள்’ என்று ரஜினி மதிப்பது, தான் கஷ்டப்பட்ட காலத்தில் உடனிருந்து உதவி செய்த எளிய நண்பர்களை தான்.

 

அவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள்.

பெங்களூர் பஸ்சில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது, டிரைவராக இருந்த ராஜ் பகதூர், திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த விட்டல், இயக்குனரும் நடிகருமான கே.நட்ராஜ் – இந்த மூவரும்தான் இன்றும் ரஜினியின் ‘வாடா போடா’ நண்பர்கள்.

ரஜினி சென்னைக்கு நடிக்க வந்தபோது, அவர் பட்ட ஆரம்பகட்ட சிரமங்களில்… அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ராஜ்பகதூர்.

அப்பேர்ப்பட்ட உயிர் நண்பரான இவர், எப்போது சென்னைக்கு வந்தாலும் தங்குவது – சாதாரண ஹோட்டலில்தான். ரஜினியே பல முறை வற்புறுத்திச் சொல்லியும் கூட, ‘என் லெவலுக்கு இது போதும்’ என்று ஸ்டார் ஹோட்டலில் தங்குவதைத் தவிர்த்தவர் ராஜ்பகதூர்.

ஒரு ஃபோன் அடித்தால், பறந்து வந்து அழைத்துப் போகும் பல ரக கார்கள். ஆனாலும் ரஜினியைச் சந்திக்க ராகவேந்திரா மண்டபத்திற்கு ஆட்டோவில்தான் வந்து போகிறார் பகதூர். அப்படியொரு அக்மார்க் எளிமை.

இவர் இப்படி என்றால்… ரஜினி எப்படி?

பெங்களூரு, மகாபலிபுரம் என மனசுக்கு பிடித்த இடங்களுக்கு திடீர் விசிட் அடிப்பது ரஜினிக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த மாதிரி நேரங்களில் சடாரென ரெடியாகி, தடாலடியாக ரஜினி வந்து சஸ்பென்சாக நிற்குமிடம்… கே.நட்ராஜின் வீடு.
‘என்னடா கிளம்பிட்டியா?’ என்று ‘செல்’லில் கேட்பார்.

“இதோ மண்டபத்திற்கு வந்துடறேன்” என்று புயலாகக் கிளம்பி வரும் நடராஜை, வாசலிலேயே வரவேற்பார் ரஜினி. இதை பார்த்து அக்கம்பக்கம் அசந்து போகும். இதில் ஸ்பெஷல் நியூஸ் – நட்ராஜினி மகள் பெயர் ரஜினி!

அப்படியே நட்ராஜுடன் கிளம்பும் ரஜினி, அடுத்துப் போகிற இடம் – விட்டலின் வீடு, அங்கேயும் வாசலில் நின்று, “கீழே வெயிட் பண்றோம், வாடா” என்று அதிரடியாக அழைப்பார் ரஜினி. அலறியடித்துக் கிளம்பும் விட்டலைப் பார்த்து குடும்பத்தினரும், ரஜினியும் ரசித்து சிரிப்பது அடிக்கடி நடக்கிற அட்ட’ஹா’சம்.

இந்த மூன்று சிநேகிதர்களிடமும் ரஜினி அனேக முறை “உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க… செய்யறேன்” என்று கேட்டுப் பார்த்துவிட்டார். “நம்மோட இந்த நட்புதான் எப்பவும் முக்கியம். இதுவே போதும்” என்று மூவரும் சொல்ல… ‘எளிமையான’ நண்பர்களின் ‘வலிமையான’ பதிலால் நெகிழ்ந்து போனார் ரஜினி!

0 Responses to “ரஜினி: உச்சத்தில் நிலைமை… உள்ளத்தில் எளிமை!”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT