8 July 2013

காதலியுடன் ஓடிய வாலிபர் மர்ம சாவு: பிணத்துடன் போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சுடு

காதலியுடன் ஓடிய வாலிபர் மர்ம சாவு
 பிணத்துடன் போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சுடு



நகரி, ஜூலை. 8:


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கோடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருந்த போதிலும் அவள் ராமகிருஷ்ணனை தீவிரமாக காதலித்து வந்தார்.

இவர்களது காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் காதல் ஜோடியினர் கடந்த மாதம் 28–ந்தேதி ஊரை விட்டு ஓடியது. இது குறித்து ராஜேஸ்வரி உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடியினர் சேலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை அழைத்து வருவதாக சென்ற போலீசார் ராஜேஸ்வரியை மட்டும் மீட்டு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். காதலன் ராமகிருஷ்ணா பற்றி எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.

இந்த நிலையில் குண்டூர் மாவட்டம் தாதேபள்ளி ரெயில் தண்டவாளம் அருகே ராமகிருஷ்ணா பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் பிணத்தை மீட்டனர். பிணம் அழுகிய நிலையில் இருந்த போதிலும் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். போலீஸ்காரர்கள் தான் ராமகிருஷ்ணாவை கொன்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு ராமகிருஷ்ணா பிணத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

காதலர்கள் இருவரையும் அழைத்து வருவதாக கூறிச் சென்ற போலீசார் ராஜேஸ்வரியை மட்டும் மீட்டு வந்தது ஏன்? ராமகிருஷ்ணா எப்படி பிணமானார்? போலீசாரிடம் சரமாரி கேள்வி விடுத்தனர். ஆவேசம் அடைந்த சிலர் போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். அங்கிருந்த சப்– இன்ஸ்பெக்டர் அப்துல் ஹக், போலீஸ்காரர் பங்கார ராஜூ ஆகியோரை தாக்கினார்கள்.

தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் பங்கார ராஜூ அங்கு வந்தார். அவரையும் முற்றுகையிட்டு ராமகிருஷ்ணா உறவினர்கள் கோஷமிட்டனர். உடனே இன்ஸ்பெக்டர் பங்காரராஜூ அமைதியாக இருங்கள். இல்லையெல் சுட்டு விடுவேன்’’ என்று தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
இது ராமகிருஷ்ணாவின் உறவினர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘‘என் மகனே போய் விட்டான் நான் இருந்து என்ன பிரயோஜனம் சுடுங்கள். சுட்டுத் தள்ளுங்கள்’’ என்று ராமகிருஷ்ணா தந்தை சாம்பசிவ ராவ் ஆவேசமாக பேசினார்.

உடனே இன்ஸ்பெக்டர் பங்காராஜூ கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 4 பேர் மீது குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். நரசிம்மராவ் என்பவரின் வயிற்றிலும் கிருஷ்ணாராவ் என்பவரின் மார்பிலும் குண்டு பாய்ந்தது எம்.பி.ஏ. மாணவர் வெங்கட்ராம் காலிலும், சூரிய நாராயணன் என்பவரின் தொடையிலும் குண்டு பாய்ந்தது. 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவியது. சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் டி.ஐ.ஜி. ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சமாதானம் செய்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

0 Responses to “காதலியுடன் ஓடிய வாலிபர் மர்ம சாவு: பிணத்துடன் போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சுடு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT