22 June 2013

''சூது கவ்வும்'' சினிமாவை பார்த்து திருச்சியில் சிறுவனை கடத்திய கல்லூரி மாணவன் கைது

''சூது கவ்வும்'' சினிமாவை பார்த்து 

திருச்சியில் சிறுவனை கடத்திய கல்லூரி மாணவன் கைது


திருச்சி : 

            புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம். அரணிப்பட்டி ஊராட்சி செயலாளர். இவரது மனைவி ராணி.

இவர்களது மகன் அழகேசன் (13). 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி மாலை ராணியின் வீட்டுக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், உறவினர்கள் என கூறி திருமண அழைப்பிதழ் தந்தனர். பின்னர் அருணாச்சலத்தின் அண்ணன் தனபாலுக்கு அழைப்பிதழ் தர வீட்டை காட்டும்படி கூறி அழகேசனை பைக்கில் அழைத்து சென்று கடத்தினர்.

அதன்பின் அழகேசன் வீடு திரும்பவில்லை. அன்று இரவு அருணாசலத்தின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர், சிறுவன் அழகேசனை கடத்தி இருக்கிறோம். 30 லட்சம் தந்தால் விட்டு விடுவோம். போலீசில் சொன்னால் அவனை கொன்று விடுவோம் என்று  மிரட்டினர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசில் அருணாச்சலம் ரகசியமாக புகார் செய்தார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி மீண்டும் அருணாச்சலத்திடம் போனில் பேரம் பேசி ரூ.13 லட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாக கடத்தல்காரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, புதுக்கோட்டை எஸ்பி உமா தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மாறுவேடத்தில் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். செல்போன் டவர்கள் மூலம் துப்பு துலக்கியதில், மர்ம நபர்கள் தச்சன்குறிச்சி, வல்லம், செங்கிப்பட்டி, லால்குடி பகுதிகளில் மாறி மாறி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டு தேடுதல் பணி நடந்தது.

இந்நிலையில் மர்ம நபர் கூறியபடி, கடந்த 17ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு 13 லட்சத்தை தஞ்சை , புதுக்கோட்டை சாலையில் காடவராயன்பட்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி அருகே முந்திரி காட்டில் அருணாச்சலம் வைத்தார். அந்த இடத்தை சுற்றிலும் போலீசார் மறைந்திருந்து கண்காணித்தனர். சிறிது நேரத்தில் பணப்பை மாயமானது. சிறிது நேரத்தில் மர்ம நபர் கூறியபடி தஞ்சை , திருச்சி சாலையில் சிறுவன் அழகேசனை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து பணத்துடன் தப்பிய ஆசாமியை பிடிக்க தனிப்படை போலீசார் கும்பகோணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், சென்னை ஆகிய பகுதிகளில் தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில் சென்னையில் ஓர் இடத்தில் பதுங்கி இருந்த கடத்தல் நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

அவரை நேற்று காலை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில், தஞ்சை மாவட்டம் வல்லம் அருகேயுள்ள அரையாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (24) என்பதும், தனியார் கலைக் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ''சூது கவ்வும்'' சினிமாவில் வருவது போல மாணவனை கடத்தி பணம் பறித்ததாக போலீசில் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மாணவனை விடுவிக்க கொடுக்கப்பட்ட 13 லட்சம் யாரிடம் இருக்கிறது. இந்த கடத்தலில் ராஜேஷின் கூட்டாளியாக செயல்பட்டவர்கள் யார், யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Responses to “''சூது கவ்வும்'' சினிமாவை பார்த்து திருச்சியில் சிறுவனை கடத்திய கல்லூரி மாணவன் கைது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT