25 June 2013

ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கே ஓட்டு: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிரடி அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கே ஓட்டு

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிரடி அறிவிப்பு

சென்னை: 

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப் போவதாக தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும் அறிவித்துள்ளனர். 

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 எம்.பிக்களை தேர்வு செய்ய நாளை மறுதினம் தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் மைத்ரேயன், அர்ஜூனன், ரத்னவேல், லட்சுமணன் ஆகியோரும், அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜாவும் போட்டியிடுகிறார்கள். 

திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக. சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.


அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் 6வது எம்.பி பதவிக்கு கனிமொழி, இளங்கோவன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 இதில் திமுகவுக்கு 23 எம்எல்ஏக்களும், திமுகவுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியின் 2 எம்எல்ஏக்களும், மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்எல்ஏக்களும் என மொத்தம் 27 எம்எல்ஏக்கள் ஆதரவு கனிமொழிக்கு உள்ளது. 

தேமுதிகவுக்கு 29 எம்எல்ஏக்கள் இருந்தாலும் அதில் 7 பேர் அதிருப்தியாளர்களாக உள்ளனர். இதனால் அந்தக் கட்சிக்கு 22 எம்எல்ஏக்களே உள்ளனர். இந் நிலையில் காங்கிரஸ் தேமுதிகவை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவும் தேமுகவுக்குக் கிடைத்தால் அவர்களுக்கும் 27 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கும். இதனால் திமுக, தேமுதிக சம பலத்துக்கு வரும்.

காங்கிரஸ் மேலிடம் இன்றிரவு எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்தே 6வது எம்.பி.யாக தேர்வாவது யார் என்பதில் தெளிவான நிலை உருவாகும். 

இந் நிலையில் 7 அதிருப்தி எம்எல்ஏக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக அவர்கள் 7 பேருக்கும் கடந்த வாரம் தேமுதிக. தலைவர் விஜயகாந்த், கட்சி கொறடா சந்திரகுமார் இருவரும் கடிதம் எழுதினர். இளங்கோவனுக்கு ஓட்டுப்போடுமாறு அந்த கடிதத்தில் 7 அதிருப்தி எம்.எல்.ஏக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

ஆனால் அதை ஏற்க 7 தேமுதிக. அதிருப்தி எம்.எல்.ஏக்களும் மறுத்து விட்டனர். அதோடு ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடப் போவதாக அறிவித்துள்ளனர். அதிமுக வெல்ல இந்த 7 அதிருப்தியாளர்களின் ஆதரவு தேவை இல்லை என்றாலும் 7 தேமுதிக. எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாங்களாக முன் வந்து ஆதரவை தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களில் ஒருவரான மைக்கேல் ராயப்பன் கூறுகையில், நாங்கள் கடந்த சட்டமன்றத் வெற் றிபெற அ.திமு.க தான் உதவியது. எனவே நாங்கள் 7 பேரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். தேமுதிக கட்சி கொறடா கடிதம் எழுதி இருப்பதால் எங்களை கட்டுப்படுத்த முடியாது. ராஜ்யசபா தேர்தலில் வாக்களிப்பது என்பது சட்டசபை நடவடிக்கை அல்ல. எனவே நாங்கள் ஓட்டுப் போடுவதில் யாரும் தலையிட முடியாது என்றார்

மற்றொரு தேமுதிக. அதிருப்தி எம்.எல்ஏவானதமிழழகன் கூறுகையில், அம்மாவை யாரும் ஏமாற்றக் கூடாது. நிச்சயம் நான் ஏமாற்றமாட்டேன். என் தொகுதி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.50 கோடிக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு நாங்கள் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்போம் என்றார். 

எம்.எல்.ஏ. சாந்தி கூறுகையில், ராஜ்யசபா தேர்தலில் நல்லவர்களுக்கே நான் வாக்களிப்பேன் என்றார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் இந்த முடிவால் போட்டி மிகக் கடுமையாகியுள்ளது. 

சஸ்பெண்ட் ஆன 6 தேமுதிக எம்எல்ஏக்கள் வாக்களிக்க அனுமதி: முன்னதாக இந்தத் தேர்தலில் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 6 தேமுதிக எம்எல்ஏக்களும் வாக்களிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 25ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் மரபை மீறி செயல்பட்டதற்காக தேமுதிகவை சேர்ந்த சந்திரகுமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, அனகை முருகேசன், செந்தில் குமார், அருள்செல்வன் ஆகிய 6 பேரை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்து சபாநாயாகர் தனபால் உத்தரவிட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.


0 Responses to “ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கே ஓட்டு: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிரடி அறிவிப்பு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT