9 September 2013

தமிழ் மணம் கமழ விமரிசையாக நடந்த சீமான் - கயல்விழி திருமணம்

தமிழ் மணம் கமழ விமரிசையாக நடந்த சீமான் - கயல்விழி திருமணம்



சென்னை: 
                 நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்- கயல்விழி திருமணம் இன்று சென்னையில் விமரிசையாக நடந்தேறியது. அரசியல் கட்சியினர், தமிழார்வலர்கள், திரைத்துறையினர் என பல்துறைப் பெருமக்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். 

திருமண விழாவில் பெரும் திரளானோர் வந்திருந்தனர். மூத்த தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் திருமணம் நடந்தேறியது.

கயல்விழி மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள்தான் கயல்விழி. அவருக்கும், சீமானுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் தமிழர் தலைவர்களான பழ. நெடுமாறன், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்று காலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி திருமணம் நடந்தேறியது.



பின்னர் அ என்ற தமிழின் முதல் எழுத்து பொறிக்கப்பட்ட பதக்கத்துடன் கூடிய தாலியை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எடுத்து சீமான் கையில் கொடு்ததார். அதை வாங்கிய சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

தாலி கட்டுவதற்கு முன்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார் சீமான்.

 

அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

திருமண விழாவில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மாலை முரசு இயக்குனர் கண்ணன் ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகர் ரித்தீஷ் எம்.பி, சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன், பாஜக மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினர்.



திரைத்துறையிலிருந்து நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, விவேக், ராஜேஷ், மனோஜ், விக்னேஷ், இயக்குநர்கள் பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், பாலா, பாலாஜி சக்திவேல், ஜெயம் ராஜா, புகழேந்தி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், வாகை சந்திரசேகர், வையாபுரி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

திருமண மேடையிலும், வெளியிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நீக்கமற நிறைந்து காணப்பட்டார். மேடையில், பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக காணப்பட்டன.

மரக்கன்றுகள் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக் கன்றுகள் நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்காக சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

0 Responses to “தமிழ் மணம் கமழ விமரிசையாக நடந்த சீமான் - கயல்விழி திருமணம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT