16 October 2013

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா அபார வெற்றி

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா அபார வெற்றி


ஜெய்ப்பூர், அக். 16:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் இன்று பிற்பகல் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.

5 வீரர்கள் அரை சதம் கடந்தனர். பின்ஞ் 53 பந்துகளில் 50 ரன்களும், ஹக்ஸ் 103 பந்துகளில் 83 ரன்களும், வாட்சன் 53 பந்துகளில் 59 ரன்களும் சேர்த்தனர். 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட மேக்ஸ்வெல், 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 53 ரன்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் பெய்லி 50 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா தரப்பில் பந்துவீச்சாளர் வினய் குமார் 9 ஓவர்கள் வீசி, 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அஷ்வின் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதன் பின்னர் 360 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இரண்டு பேரும் அதிரடியாக ஆடி சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய தவான் அரை சதம் அடித்தார். அடுத்த சிறிது நேரத்தில் ரோகித் சர்மாவும் அரைசதமடித்தார். இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலியா மிகவும் சிரமப் பட்டது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தவான் 95 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அடுத்து சர்மாவுடன் ஜோடி சேர விராட் கோலி களம் இறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். சர்மா 17 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து 123 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். 52 பந்துகளை எதிர்கொண்ட கோலி 8 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்தார்.

44வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என பறக்க விட்ட ரோகித் சர்மா இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் இந்திய அணி 39 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 362 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் தொடர் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.

0 Responses to “இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா அபார வெற்றி”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT