17 November 2013

ஓய்வுபெற்ற நாளில் மகத்தான கவுரவம் : சச்சினுக்கு பாரத ரத்னா விருது


ஓய்வுபெற்ற நாளில் மகத்தான கவுரவம் : சச்சினுக்கு பாரத ரத்னா விருது



டெல்லி: 

               கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’வை அறிவித்து, மத்திய அரசு மகத்தான கவுரவம் அளித்துள்ளது. 

அதேபோல், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தனது 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து சச்சின் டெண்டுல்கர் (40) நேற்று ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் யாரும் அசைக்க முடியாத பல சாதனைகளை புரிந்து, உலகளவில் நாட்டுக்கு இவர் பெருமை சேர்த்துள்ளார். 

இதை பாராட்டி அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக எல்லா தரப்பாலும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், விளையாட்டு துறைக்கு இந்த விருது வழங்க, விதிமுறைகளில் இடம் இல்லாமல் இருந்ததால் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. கடந்தாண்டு இந்த விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்து, விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கும் இந்த விருதை வழங்க வழி செய்தது.

இந்நிலையில், தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற டெண்டுல்கர், மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ரசிகர்களிடம் இருந்து நேற்று உணர்ச்சிமயமாக விடைபெற்ற போது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவருக்கு மகத்தான கவுரவத்தை அளிக்கும் அறிவிப்பு வெளியானது. 

நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது அவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை தகவல் தொடர்பாளர் வேணு ராஜாமணி வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறும் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி ‘பாரத ரத்னா’ வழங்கியுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், விளையாட்டுத் துறையில் இந்த விருதை பெரும் முதல் வீரர் என்ற பெருமை டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது.




சி.என்.ஆர்.ராவ்: விண்வெளி ஆராய்ச்சியில் உலகளவில் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள விஞ்ஞானியான சி.என்.ஆர்.ராவுக்கும் (89) பாரத ரத்னா விருதை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதன் மூலம், சி.வி.ராமன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெறும் 3வது விஞ்ஞானி என்ற பெருமை ராவுக்கு கிடைத்துள்ளது.

செவ்வாய் கிரக ஆய்வுக்காக சமீபத்தில் ‘மங்கல்யான்’ விண்கலம் அனுப்பப்பட்டதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், சர்வதேச அளவில் இவர் வெளியிட்டுள்ள 1,400 ஆராய்ச்சி கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. இவர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

0 Responses to “ ஓய்வுபெற்ற நாளில் மகத்தான கவுரவம் : சச்சினுக்கு பாரத ரத்னா விருது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT