24 December 2013
கொள்ளை அடிக்க நுழைந்தபோது வெளிப்பக்கம் வீட்டை பூட்டியதால் தப்ப முடியாமல் தவித்த ஆசாமிகள்
Do you like this story?
கொள்ளை அடிக்க நுழைந்தபோது வெளிப்பக்கம் வீட்டை பூட்டியதால்
தப்ப முடியாமல் தவித்த ஆசாமிகள்
சென்னை:
இன்ஜினியர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், உரிமையாளர் வந்ததால் தப்பியோட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருநின்றவூர் பாக்கம் கிராமம் சம்பந்தம் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (28). தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனாம்பிகை (24). திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது.
நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கமலக்கண்ணன் மனைவியுடன் மறைமலைநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது பூட்டப்பட்ட முன்கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர் சுதாரிப்பு அடைந்தார். உடனடியாக, கதவை வெளிப்புறமாக கமலக்கண்ணன் பூட்டினார். பின்னர் அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத் தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். பொதுமக்கள் குவிந்ததை கண்ட ஆசாமிகள் உள்புறமாக கதவை பூட்டிக்கொண்டனர். பின்னர் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் அறையில் இருந்த ஜன்னலை கழற்றி எடுத்துவிட்டு 2 ஆசாமிகள் எகிறி குதித்து ஓட முயன்றனர்.
இதை கண்ட பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து கமலக்கண்ணன் திருநின்றவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், எஸ்.ஐ சுப்பிரமணி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்களை பொதுமக்கள் பிடியில் இருந்து மீட்டனர். விசாரணையில், மாங்காடு செல்வம் (26), மணலி நாகராஜ் (25) என தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து கமலக்கண்ணன் வீட்டில் திருடிய நகைகளையும், அவர்கள் கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரிக்கின்றனர்.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கொள்ளை அடிக்க நுழைந்தபோது வெளிப்பக்கம் வீட்டை பூட்டியதால் தப்ப முடியாமல் தவித்த ஆசாமிகள்”
Post a Comment