1 December 2013

திருமணத்துக்காக மண்டபம் செல்லும் வழியில் லாரி மோதி பைக்கில் தீ மணமகன் கருகி சாவு

திருமணத்துக்காக மண்டபம் செல்லும் வழியில் லாரி மோதி 
பைக்கில் தீ மணமகன் கருகி சாவு



திருப்புவனம்:     
   
          சிறிதுநேரத்தில் நடக்க இருந்த திருமணத்துக்காக தயாராகி, மண்டபத்துக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மணமகன் தீயில் கருகிப் பலியான சம்பவம் திருப்புவனம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள டி.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மதுரை எம்.கே. புரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று காலை லாடனேந்தலில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது.

இதற்காக உறவினர்கள் மண்டபத்தில் முன்னதாகவே வந்து தங்கி இருந்தனர்.மண்டபத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லை என்பதால் மணமகன் மணிகண்டன் அருகில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விட்டு திருமண மண்டபத்திற்கு நேற்று அதிகாலை பைக்கில் வந்து கொண்டிருந்தார்.அப்போது மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக் கொண்டு வந்த லாரி, மணிகண்டன் ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக் சுக்குநூறானது. பைக்கின் பெட்ரோல் டேங்க் மூடி கழன்று விழுந்ததில் அதில் இருந்த பெட்ரோல் சிதறி திடீரென தீப்பற்றியது. இதில் பைக்கும், மணிகண்டனும் தீயில் சிக்கினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தீயில் மணிகண்டன் உடல் கருகி பரிதாபமாக பலியானார். தகவலறிந்த திருப்புவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்கள் விபத்து பற்றி தகவலறிந்ததும் அலறியடித்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு கருகிக் கிடந்த மணிகண்டன் உடலைக் கண்டு கதறி அழுதனர்.  மதுரையிலிருந்து லாடனேந்தலில் உள்ள திருமண மண்டபத்திற்கு புறப்படத் தயாராக இருந்த பெண் வீட்டாரும் தகவலறிந்து பரபரப்புடன் திருப்புவனம் வந்து சேர்ந்தனர்.

0 Responses to “திருமணத்துக்காக மண்டபம் செல்லும் வழியில் லாரி மோதி பைக்கில் தீ மணமகன் கருகி சாவு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT