3 December 2013

டீசல் தீர்ந்து போனதால் தள்ளி சென்ற வேன் மீது பஸ் மோதல்; 4 பேர் சாவு காஞ்சியில் பாலத்தில் பரிதாபம்

டீசல் தீர்ந்து போனதால் தள்ளி சென்ற வேன் மீது பஸ் மோதல்
4 பேர் சாவு காஞ்சியில் பாலத்தில் பரிதாபம் 




காஞ்சிபுரம்:

          காஞ்சிபுரம் அருகே பாலாற்று பாலத்தில் நேற்றிரவு வேன் மீது தனியார் கம்பெனி பஸ் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கீழ் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (45). இவரது பேரன் கார்த்திக் ராஜா பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொள்ள முனுசாமி உறவினர்கள் 2 வேனில், திருவண்ணாமலை மாவட்டம்  சித்தாத்தூர் கிராமத்துக்கு வந்தனர். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு ஊருக்கு திரும்பினர்.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்று பாலத்தில் வந்துகொண்டு இருந்தபோது டீசல் தீர்ந்ததால் ஒரு வேன் நின்றுவிட்டது. இதனால் மற்றொரு வேனை அனுப்பிவிட்டு, டீசல் தீர்ந்துபோன வேனை தள்ளிக்கொண்டு அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றனர்.அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்த தனியார் கம்பெனி பஸ், வேன் மீது பலமாக மோதியது. 

இதில் வேன் மற்றும் பஸ்சின் முன்பகுதியும் நொறுங்கியது.  வேனை தள்ளிக்கொண்டு சென்ற  சசிகுமார் (25), சிவா (28) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சத்ரியன் உள்பட 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் மற்றும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனுசாமி, 3வயது குழந்தை  யோகலட்சுமி  இறந்தனர். இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கீழ்வெண்பாக்கத்தை சேர்ந்த எழிலரசி, விக்ரம், வசந்தி, மகாலட்சுமி, தயாளன், வள்ளி, தேன்மொழி, விக்னேஷ், துளசி, கலைச் செல்வி, பிரமிளா, சண்முகம், தமிழ், சபர்மதி, கவிதா, வள்ளியம்மாள், சுரேஷ், மோகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வேன் டிரைவர் சத்ரியனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிவிட்ட தனியார் பஸ் டிரைவரை தேடி  வருகின்றனர்.

0 Responses to “டீசல் தீர்ந்து போனதால் தள்ளி சென்ற வேன் மீது பஸ் மோதல்; 4 பேர் சாவு காஞ்சியில் பாலத்தில் பரிதாபம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT